ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை.

ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலில்  நவீன சீரமைப்பு என்ற பெயரில் ரூ.709 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் தளம் ,கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிக்கான ஆயத்த பணி நடந்து வந்தது. இதற்கு ஒரு தரப்பு விவசாய சங்கத்தினர் கான்கிரீட் தளம், சுவரு அமைந்தால் கடைமடை பகுதி வரை தண்ணீர் வீணாகாமல் செல்லும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


கான்கிரீட் தளம், கரை அமைத்தால் நிலத்தடி நீராதாரம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கசிவு நீர்ப் பாசனத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என ஒரு தரப்பு விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது பணிகள் மேற் கொள்ளாமல் அப்படியே உள்ளது. இருதரப்பு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்தார். கடந்த வாரம் திட்டம் வேண்டாம் என்று கூறிய எதிர்தரப்பு விவசாயிகளிடம் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்தார். 


இதற்காக அந்த சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கீழ்பவானி ஆயக்கட்டு பாசன தாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.


அப்போது சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் அமைச்சர் முத்துசாமி இடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 9-ந் தேதி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது செயற்பொறியாளர் மே 15ஆம் தேதி அனைத்து வேலைகளும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை வேலைகள் தொடங்கப்படவில்லை. 


கீழ்பவானி வாய்க்கால் மிக பலவீன மடைந்து தண்ணீர் செலுத்தும் திறனை இழந்து விட்டது என 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் அறிக்கை தெரிவிக்கிறது. தருக்கிய தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மோகனகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று கீழ்பவானி கால்வாயை சீரமைத்து வலுப்படுத்த தமிழக அரசு நபார்டு வங்கி மூலம் ரூ.710 கோடி மதிப்பில் ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் தடைப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கால்வாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல முறை தண்ணீர் நிறுத்தப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். 


இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 19 நாட்கள் கடந்த நிலையிலும் நீர்வளத்துறை திட்டவட்டமான முடிவுகளை எடுத்து சீரமைப்பு வேலைகளை தொடங்காமல் இருக்கின்றனர். இதன் காரணமாக கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இங்கு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி தொடர்ந்து விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

No comments:

Post a Comment