கோபி அடுத்த டி.என் . பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது . ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என் . பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைக்கு கடம்பூர் குன்றி , விளாங்கோம்பை , மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர் காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படும் . இந்த அணையில் மூலம் குண்டேரிப்பள்ளம் , வினோபாநகர் , வாணிப்புத்தூர் , மோதூர் , கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது . இந்நிலையில் , அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் . அதைத்தொடர்ந்து , குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர் . இன்று ( செப் .21 ) முதல் நவம்பர் 4 - ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் . வலது கரையில் 8 கன அடி தண்ணீரும் இடது கரையில் 16 கன அடி தண்ணீரும் , 46 நாட்களில் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டு மொத்தம் 36 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment